என் தொலைத்தொடர்பு நட்பே ....!!
காலை எழுந்ததும்...
கண்கள் பார்க்கும் கண்ணாடி நீ
சாலை பயணத்தில்....
பாதை காட்டிடும் வழிகாட்டி நீ
என்னோடு நீ சேர்ந்த நாள் முதலாய்
உன்னோடு உரையாடி என் நேரங்கள் முடிகிறது
கண்ணோடு கதை பேசி காலங்கள் தேய்கிறது
கையோடு ஒட்டிக்கொண்டு விலகாமல் வாழ்கிறாய்
வானோடும் மண்ணோடும் நிகழும் யாவுமே
தினந்தோறும் நீ கொண்டு வருகிறாய்
கானங்கள் கதைகள் காவியம் பாடியே
மனமெங்கும் நீ லயித்து நிற்கிறாய் ....
மென்மேலும் மெருகேறி
மென்பொருளில் உருமாறி
தேசம் எங்கும் நீ நிறைந்திருக்க
நேசம் எங்கோ சென்று மறைந்திருக்க
நேரம் தொலைந்து காலம் கரைந்து
தேகம் ஒன்றாகி போனது உன்னோடு இன்று .....
உன்னுள் மின்சாரம் பாய்கையில்
என் உயிரும் இங்கு மீளுது ...
நீ என் தோழனா இல்லை பகைவனா
என் தூரத்து சொந்தமா நீ
ஆயினும் துரத்துது உன் பந்தமே !!
உன்னை மறுத்திடவே முனைந்தேன்
உன்னை துறந்திடவே துணிந்தேன் ..
உன்னை தள்ளிவைக்கவே எத்தனிக்கிறேன்
அந்த முடிவையுமே ஏனோ ஒத்திவைக்கிறேன்..
என்னின் ஆறாம் விரலே ..!!
தூரத்து சொந்தங்கள் எல்லாம் அண்மையாய்
பக்கத்து பந்தங்களை தொலைவாய் செய்வித்து
நமக்கென்றோர் உலகம் செய்து என்னை
வாவென்று அழைத்து கைது செய்கிறாய்
வீட்டோடு நான் வாழ்ந்துமே என்னை
தீவுக்குள் சிறை வைத்தாய் உன்னோடு.....!!!
Goodddddddd
ReplyDelete