Saturday, 27 July 2019

மனிதனும் மாற்றமும்

காலம் உருண்டோட
ஞாலமோ மருண்டோடுது ...
கதிர்வீச்சில் மட்டுமே ஒளிந்திருந்த நேரம்
கண் சிமிட்டுது காலக்கெடுவையாய் ...
சேவலின் கூவலில் விடிந்த காலை
அலைப்பேசியின் எச்சரிக்கை ஒலியாய்..

மலர்ந்த  பூக்களில்  கமழ்ந்த சுகந்தம்
அடைக்கப்பட்ட வாசனைத் திரவியமாய் ...
பனை ஓலை வேய்ந்த இல்லம்
கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடமாய் ...
அணை கட்டி பெருகிய ஆறு
கொள்ளை போகும் மணலாய் ...

முப்போகம் விளைந்த விவசாய பூமி
இப்போது  காய்ந்த  முற்காடாய் ...
அம்மியில் அரைத்த பாட்டி சமையல்
அடுக்களையின் நவீன இயந்திரமாய் ...
பிறந்து வளர்ந்த சொந்த ஊரிற்கு
என்றாவது வரும் விருந்தாளியாய் ....!!!

கடவுள் படைத்ததாய்
பிரகடனப்படுத்தப்பட்ட பிரபஞ்சம்
ஆளப்பட்டது  மனிதனால் ....!
மனிதன் உருவாக்கிய
வர்த்தகம் இணையம்
ஆள்கிறது உலகை ....!!


 

வானவில்

Related image


நீலக் கம்பளமாம் வானம்
நிகழ்ந்தது தன்னிலோர் அற்புதம்
நொடிப் பொழுதேனும் நிறைந்திடும்
நெஞ்சம் காணும் நேரம்
ஏழுவண்ணப் பட்டு உடுத்தி
எழிலாய் உலா வந்தாள்
எட்டா உயரத்தே எவர்
வரைந்த ஓவியமோ ??
எட்டிப் பிடிக்கும் முன்னே
மறைந்திடும் காவியமோ ??

Thursday, 18 April 2019

தேர்தல் விழா


விடியலுக்கென காத்திருக்கும் மக்கள்
மலருமென்ற நம்பிக்கையில் பூக்கள்
வேனில்கால உதிரா இலைகள்
வரவேற்க கோர்த்திடும் கைகள்
வர்ணம் பூசப்பட்ட சுவர்கள்
வகை வகையாய் சுவரொட்டிகள்
திடீரென முளைத்த மேடைகள்
வான்முட்டும் மேடைபேச்சுக்கள்
கட்டப்பட்ட கொடிகள்
வெடிக்கும் வெடிகள் ...
ஊர் திருவிழாவோ ??
இதுவும் விழா தான் ...
ஆனால்...
மகேசன் ஆட்சிக்கு அல்ல
மக்கள் ஆட்சிக்கு !!

செய்ததை சொல்லும் ஒரு கூட்டம்
சொல்வதை செய்வோம் என்று இன்னொன்று
இலவசம் கொடுத்து தன்வசம் இணைக்க
தள்ளுபடி செய்து முதல்படி அடைய
வாய்ப்புகள் உண்டென யாசிக்கும் கோப்புகள்
வாக்குறுதிகள் பக்கம் பக்கமாய் ....
வசனங்கள் எழுதப்பட்டு  இங்கே
வாசிக்கப்பட அரங்கேறும் பிரச்சாரங்கள் !!

மூவாறு வயது கடந்து
முதல் உரிமை பெற்ற
களிப்பில் ஒரு கூட்டம் - தான்
முதுமை அடைந்த காலத்தும்
முதல்வன் கடமை செய்யாத
வெறுப்பில் ஓர் கூட்டம் !!
ஆயினும் ....
எங்கோர் மூலையில் இருந்தாலும்
எனக்கோர் கடமை உண்டென்று
தன்னூர் செல்லும் குடிமகன் !!

எழுதப்படா  விதியென
ஊழல் உள்ளவரை
உழப்படா வயலாய்
தரிசாகும் அரசியல் !!

இன்றொரு நாள் மட்டும்
கறை படியட்டும்
இனிவரும் ஒவ்வொருநாளும்
கறை படியாதிருக்க ...!!

Tuesday, 2 April 2019

படர்க்கை எனும் மூன்றாம் நிலை






இலக்கண இலக்கியமின்றி இயற்கையின் இயல்போடு இயைந்து நிகழும் எண்ணங்களில் தவழும் எழுத்துக்களின் பதிவாய் ....!! 

            நமது சிறு வயதில் தாத்தா பாட்டி கதை கூறி நம்மை உறங்க வைத்ததுண்டு . அதில் சில நிகழ்ந்தவை ...சில கற்பனையாய் ... சில கற்பனைக்கும் எட்டாதவையாய் .... நாமும் நம்பியதுண்டு . காக்கை பாடியது .... நரி பேசியது ... இப்படி என்னவெல்லாமோ கூறியுள்ளார்கள் ... எல்லாவற்றையும் நாமும் நம்பி பகிர்ந்துள்ளோம் . இப்படி நாம் செவி வழி கேட்டது , செய்தி வழி வாசித்தது என அனைத்தும் எவரோ ஒரு மூன்றாம் மனிதரை பற்றியது என்றால் அந்த நிகழ்வு நிச்சயம் நமக்கு கதை ஆகத்தான் தோன்றும். நாம் கேட்டு ரசித்து பகிர்ந்த அன்றைய கதைகள் அனைத்தும் நமக்கு புத்தி புகட்டவும் பலவான் ஆகவும் சாமர்த்தியமும் சத்ரியமும் சொல்லி தந்தன. ஆனால்  இன்றைய நிலை அவ்வாறில்லை . மக்களிடையே சில நேரங்களில் தொல்லை ஆகிவிட்டதென நினைக்க வைக்கும் அளவிற்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் சாத்தான்கள் ஆகிவிட்டன. இடைவெளியில் கதைக்க, ஊடகங்களில் பகிர , பிறரிடம் விமர்சிக்க என ஒரு பொழுது போக்கு நிகழ்வாகி விட்டது. 
           சரி விசயத்திற்கு வருவோம் ... எங்கோ நடக்கும் எல்லாமும் நமக்கு தெரியவந்ததில் லாபம் மட்டுமா  நேர்ந்தது ..??  சிந்தித்து  பார்க்கையில் இல்லை என்பது  மட்டுமே நமக்கு விடையாய் கிட்டும். உதாரணமாய் குறுஞ்செய்தி வழியாய் தகவல் வரும் , இந்த செய்தியை  பத்து பேருக்கு பகிர்ந்தால் ஒருவராவது பயன்பெறுவர் உடன் தொடர்புக்கு தொலைபேசி எண்ணோடு . உடனே பகிர்ந்து விடுவோம் .  பயன் பெறட்டுமென்று நாம்தான் நல்லவர் ஆயிற்றே !!  இன்னும் சற்றே உற்று நோக்கினால் நாம் பகிரும் வலையொளியில் பரப்பப்படும் காணொளிகள்  அதிகம் பேரால் பார்க்கப்பட வேண்டுமென பரபரப்பான தலையங்கங்களில் பகிரப்படுகின்றன. என்றாவது ஒருநாள் நாம் அதன் உண்மை நிலை ஆராய்ந்ததுண்டா ?? பத்து சதவிகிதம் பேர் செய்திருப்பர் . மீதம் உள்ள தொண்ணூறு சதவீதம் பேர் தெரிந்தோ தெரியாமலோ பரப்பும் தவறான செய்தியினால் பாதிக்கப்படுபவர் தான் படர்க்கை நிலையில் உள்ளவர் . ஆம் !  தன்னையும் தன்னை சாராதவருமான மூன்றாம் நிலை மனிதர்கள் !!   
          நாளிதழ் எடுத்து கொள்வோம் , தரவரிசையில் முன்னிலை வகிக்க வேண்டுமென மக்களின் மனநிலையை தாக்கும் வகையில் செய்திகள் வெளியாகின்றன. அதனை நாமும் விமர்சனம் செய்ததுண்டு. வருத்தப்பட்டது உண்டு. நான் நாளிதழ்களையோ  ஊடகங்களையோ  இங்கே சாடவில்லை ... இதழ்களைத்தான் சாடுகிறேன் . அதற்காக எனக்கென்ன என்று இருந்திடவேண்டுமென்று சொல்லவில்லை . எது நல்லது எது தீயது என்று பகுத்தறிய ஆறாம் அறிவு உண்டு . அதில் ஏதும் ஐயம் உண்டோ ?எங்கோ மழை வெள்ளம் வந்து மக்கள் அவதிப்பட்டால் உதவும் நல்லவரும் நாம்தான் ...!! நல்லவேளை இங்கே வரவில்லை நாம் தப்பித்தோம் என்று எண்ணும் நல்லவரும் நாம்தான் ..!! இந்த இரு எண்ணங்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் படர்க்கை நிலை ... எவர்க்கோ ... நமக்கில்லை ... எனக்கு அது நேரவில்லை ... இந்த எண்ணங்களை பிறர் அவதிப்படும் நேரத்தில் மட்டும் நினைவில் கொள்வது சரியாகுமா ??  நேராமல் காப்பதில் தான் உள்ளது . அதாவது நான் பகிரும் இந்த செய்தி உண்மையாய் இராவிட்டால் அவரின் நிலை என்ன என்ற எண்ணம் நம்மை அதை ஆராயாமல் பகிர செய்யாது . சிந்தித்து செயலாற்றுவோம் . உண்மை நிகழ்வுகள் வரலாற்றின் ஏடுகளில் .. அதனை அல்லாதவை அனைத்தும் கட்டுக்கதைகளே நிலை அறியும் வரை . . .

வாழ்க்கையில்...
தனக்கென நிகழும் வரை
சம்பவங்கள் வெறும் கதைதான்!!
சிலருக்கு வேடிக்கையாய்....
பலருக்கு வாடிக்கையாய்.....
எனது என்ற நிலை
உனதென ஆகும்போது
இதயம் இலகுவாகிடுமோ???
சிந்திப்போம் மூன்றாம் நிலையிலும்
சந்திப்போம் மனிதர்களை அல்ல .....
மனித மனங்களை!!!


இதுவரையிலும் நிகழ்ந்ததை மாற்ற இயலாது . ஆனால் இதற்கு மேல் புதிதாய் நிகழாமல்  செய்ய  இயலும்  .  

                   
                         எதிர்பார்ப்பின்றி வாழ்ந்திடுங்கள் 
                         எல்லையின்றி நேசியுங்கள் 
                                                         - முற்று பெறா முடிவிலி ....



   

Monday, 25 March 2019

தொடக்கம்

     


          எத்தனையோ  ஏமாற்றங்களுக்கும்  ஏக்கங்களுக்கும் மத்தியில் ஒரு சில எதிர்பார்ப்புகள் நிறைவேறிட கூடும் என்ற நம்பிக்கையில் இந்த வாழ்க்கை பயணம் காலம் கடந்து இன்னமும் தேடலிலே தொடர்கிறது . அது போன்றே ஒரு சிறிய எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் கொஞ்ச காலம் உறங்கி கொண்டிருந்த என் எழுதுகோலை எழுப்பி என்னோடு பயணிக்க செய்கிறேன். இதுகாறும் எனது எழுத்துக்களுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்த எனது நட்பு வட்டாரங்களுக்கு நன்றிகளுடன் இப்பொழுது சிறிய முயற்சியாய் கவிதை நடையில் இல்லாது உரைநடையில் எனது எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க விழைகிறேன். முதல் பதிவு ... முதல் தொடக்கமாய் ..!!
        புலரும்  காலை.. உதிக்கும் செங்கதிரோன் ..அலரும் மலர் ... வீசும் தென்றல் ... இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு தொடக்கம் உண்டு . புது வருடம் ... பிரதி மாதம் .... தினந்தோறும் ...மணித்துளி ... நொடிப்பொழுது ... இப்படி எதிலிருந்து வேண்டுமானாலும் தொடங்கப்படலாம் . மகிழ்ச்சி.. வருத்தம் ..கோபம்.. துக்கம்.. வெற்றி.. தோல்வி...ஆக எல்லா உணர்வுகளுக்கும் ஒரு தொடக்கம் உண்டு .நாம் எவ்வாறு தொடங்குகிறோம் என்பது மட்டுமே வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்கிறது.
             வாழ்க்கை ஒரு குழந்தை போல. ஆம் , ஒரு குழந்தை கருவில் உருவாக தொடங்கியதிலிருந்து ஒரு புதிய ஆரம்பம் உண்டாகிறது. பிறந்த பின்பு , சிரிக்கும் பொழுது , அழும்பொழுது , தவழும்போது , விழும்பொழுது , எழும்பொழுது , வளரும்பொழுது என ஒவ்வொரு நிலையிலும் மகிழ்கிறோம் . அந்த குழந்தையின் எதிர்காலம் இன்றைய நம் வளர்ப்பில் தானே உள்ளது . ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்கிறோம் . எதிர்கால கனவிற்காக இன்றைய  ஒவ்வொரு   நிமிடங்களையும்  சிறு தொடக்கமாய் கொள்வோம் . 
        வாழ்க்கை ஒரு வற்றா பெருங்கடல்..ஆபத்தானது ;ஆனால்  அழகானதும் கூட. அதில்  நாம்  செய்யும் ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. சிலநேரம் அமைதியாய்..ஆத்மார்த்தமாக ; சில நேரம் ஆக்ரோஷமாய்.. வலி உள்ளதாக. இப்படிப்பட்ட வாழ்க்கையில் தொடக்கங்கள் மட்டுமே உண்டு, முடிவு என்பது இல்லை.ஆம், இறப்பு என்பது முடிவல்ல ; நாம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்ந்திருந்தால் !!  புத்தராய் ஏசுவாய் வாழ வேண்டுமென்பதில்லை , மனிதராய் வாழ்ந்தால் கூட போதும் . இறப்பிற்கு பின்னும் பேசப்படுவோம். நீங்கள் நம்புகிறீர்களோ..  இல்லையோ .. ஒவ்வொரு முடிவிலும் ஒரு தொடக்கம் இருக்கிறது. பழுத்த இலைகள் உதிர்ந்து தளிர்களை தருகிறது. காய் முதிர்ந்து பழமாய் மாறுகிறது . அரும்பிலிருந்து முகையாகி , மொக்காகி  முகிழ்ந்து மலர்ந்து அலர்ந்து உதிர்ந்து செம்மலராகி ... இப்படி ஒவ்வொரு நிலையின் முடிவிலும் புதிதாய் தொடக்கம் உள்ளது. இது முடிவா இல்லை தொடக்கமா .... நீங்களே முடிவு செய்யுங்களேன்  !! 
     கரைந்து போன நிமிடங்கள் முடிவென  எண்ணம் கொள்ளுகிறீர்களா ??  நிச்சயமாய் இல்லை , அது நினைவுகளின் தொடக்கம் !! இறந்தகாலத்திற்கு என்றும் அழிவில்லை .. அது நினைவுகளாய் நிலைக்கும் ..!! தொடங்குவோம் நினைவுகளை சேகரிக்க ....!!
           நீர்த்துளிகள் காற்றில் கரைந்து முகிலில் தொலைந்து மழையாகி பூமி சேர்ந்து  மீண்டும் துளியாய் .... இது வெற்றியா தோல்வியா ?? இழப்பு என்பது முடிவா ?? அறவே இல்லை.. இழப்பில் வெற்றிக்கான பாடம் பயின்றுள்ளோம். வலிகளை வென்று புது வழிகளை அறிந்து பிறர் விழி நம்மை கண்டு உயர்த்திட முயல்வோம் .....தொடங்குவோம் வெற்றிக்கான முயற்சியை ....!!
        வாழ்க்கையின் ஓர் உன்னத கலை - அன்பு  செலுத்துவது.உங்களால் முடிந்த வரையில் எவரேனும் ஒருவர் முகத்திலாவது புன்னகையை வரவழையுங்கள். பிறர்க்கு உதவும்பொழுது மனதில் ஒரு சிறு நிம்மதி உதயமாகும் . இதழில் தோன்றும் புன்னகை , இதயத்திலிருந்து எழும் ஒரு சொல்  கூட போதும் பிறர்க்கு உதவ... நம்பிக்கை தரும் ஒரு சொல் போதும் நாணயம் இல்லாதவன் கூட நாயகன் ஆகிடுவான் . தொடங்குவோம் கரம் கொடுத்திட பிறர் சிரம் உயர்த்தி  வாழ்ந்திட ...!! 
     புதியதொரு அத்தியாயமென ...வண்ண எழுதுகோலால் ; பசுமையான நினைவுகளுக்கு பச்சை நிறம் ; மகிழ்ச்சிக்கு மஞ்சள் நிறம் ; வெற்றிக்கு சிவப்பு நிறம் ; தூய்மைக்கு வெள்ளை நிறமென பிடித்த வர்ணங்களில் நிகழ்வுகளை சிறை செய்யுங்கள். எண்ணங்களால் எழுத்துக்களால் வண்ணங்களால்  வடிவமையுங்கள் . வெயிலும் மழையும் இணைந்து வானவில் உருவாவது போல , பகலும் இரவும் கலந்து நாட்கள் உலவுவது போல எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வோம் . நிகழ்வதில் வேண்டியவைகளை சேகரித்து கொண்டு களைகளை விட்டுவிடுவோம். ஒவ்வொரு நொடியும் புதியதொரு முயற்சிக்கான சந்தர்ப்பம் , அடுத்து நிகழ்வதை நாம் தீர்மானிப்போம் . உயிரோடு இருப்பது  மட்டுமல்ல   வாழ்க்கை ...உணர்வுகளோடும் இருந்திட வேண்டும் ! எழுதிட தொடங்குவோம் நம் வாழ்க்கை புத்தகத்தை....!!
         
 இதுவரையிலும் நிகழ்ந்ததை மாற்ற இயலாது . ஆனால்  நிச்சயமாய் இதற்கு மேல் புதிதாய் ஒரு மாற்றத்தை  நிகழ்த்த இயலும் .
    
      எதிர்பார்ப்பின்றி வாழ்ந்திடுங்கள் 
        எல்லையின்றி நேசியுங்கள் 
                                                                                 - முற்றுப்  பெறா முடிவிலி ....

Friday, 22 March 2019

கவிதை





உதிக்கும் சூரியனோடு உரையாடி கொஞ்சம்
மதிக்கும் மனிதத்தின் மனதோடு கொஞ்சம்
பறக்கும் சிறகுகளின் பரவசத்தில் கொஞ்சம் 
சிரிக்கும் பூக்களின் இதழோடு கொஞ்சம் 
ஆர்ப்பரிக்கும் கடலின் அலையோடு கொஞ்சம் 
கண்பறிக்கும் சிலையின் கலையோடு கொஞ்சம்
வளைந்த வானவில்லின் வண்ணத்தில்  கொஞ்சம் 
விளைந்த பூமியின் பசுமையில் கொஞ்சம்
சீரும் மனதின் சீற்றங்களில் கொஞ்சம் 
கோரும் புது மாற்றங்களில் கொஞ்சம் 
கதைத்த சொல்லின் கதைகளில் கொஞ்சம் 
விதைத்த வினையின் விதியாய் கொஞ்சம் 
கட்டிய மாளிகையின் மமதையில் கொஞ்சம்
பூட்டிய சிறையின் வெறுமையில் கொஞ்சம்
கற்ற வேதங்களின் அறிவாய் கொஞ்சம் 
மற்ற வேதனைகளின் விலையாய் கொஞ்சம் 
விழி எய்திடும் அம்பில் கொஞ்சம்
மொழி செய்திடும் வம்பில் கொஞ்சம் 
மறந்திட கொஞ்சம் மாய்த்திட கொஞ்சம் 
துறந்திட கொஞ்சம் துதித்திட கொஞ்சம் 
சொற்படி  கொஞ்சம் சுயமாய் கொஞ்சமென 
கொஞ்சம் பார்த்து கொஞ்சம் கேட்டு
கொஞ்சம் உணர்ந்து கொஞ்சம் வியந்து 
கொஞ்சும் தமிழில்  நான் அனுபவித்ததை 
வஞ்சமின்றி வயலில்  விதைத்திட்ட 
விதை - வார்த்தை 
நெஞ்சம் நிறைந்திட விளைந்திட்ட  
விளைச்சல் - கவிதை !!

Wednesday, 20 March 2019

புத்தாண்டெனும் தாய்

நினைவுகளோடு கரைந்து செல்லும்
ஒவ்வொரு நாளின் முடிவிலும் பூக்கிறது
நித்தம் புது  கனவுகளோடு  புதிதாய் 
ஒரு விடியல்  புன்னகையோடு ....
நில்லாமல் ஓடிய  நிமிடங்களின்
சொல்லாமல் போன கதைகள்  !!
செல்லரித்து போய்விடும் 
சின்னஞ்சிறு சண்டைகள் !!
வாஞ்சை சிரிப்போடு
வஞ்சனையில்லா உள்ளங்கள் !!!
களவு போன பொழுதுகளில் 
நெஞ்சை களவாடிய இதயங்கள் !!
உலா போன  நிலவோடு
உறைந்து போன உதயங்கள் !!!
கற்பனைகளோடு  காற்றிலே
மிதந்த காலங்கள் !!!
சொப்பனங்கள் சோதனைகளாகி
நிகழ்ந்த  ஓலங்கள் !!!
என  தினம்  மரணித்த நிமிடங்கள்
ஜனித்தன  கடந்த  வருடத்தின்  நினைவுகளாய் ....!!!!
இதழ்களின் குறுஞ்சிரிப்பில்
இதயங்கள் இதழ் விரிக்க.....
நிகழ்வுகளின் சேகரிப்பில்
நினைவுகள் அதிகரிக்க ......
மீண்டும் பிரசவிக்க காத்திருக்கும்
புது வருடம் !!!

தேசியக்கொடி

பண்பாடுள்ள பாரம்பரியம் ....
எண்ணிலா வளம் ...
எழுத்தில் முடியா  திறம் ...
எளிதில் அடங்கா வீரம் ....
சீர் தூக்கின் வான் எட்டும் துலாபாரம் ...
பார் நோக்கின் கை தட்டும் கலாச்சாரம் ...
வளம் கண்டே வீசினர் வலையை
பணம் கொண்டே பேசினர் விலையை
களம் சென்றே எதிர் நோக்கினர் நிலையை
பலம் கொண்டே தாக்கினர் தலையை .....!!
தாய் நாட்டிலே  அடிமைகளாய்...
வாய் பேசாத ஊமைகளாய் ....
பொறுமை காத்தான் ....
நிலை  மாறவில்லை 
பொங்கி எழுந்தான் ... !!!
போராட்டம் விடியும்  வரை ....
பனிமூட்டம் விலகும் வரை ....
வயல் வெளிகள் யுத்தகளங்களாய்
வான்வெளியில் ரத்தநிறங்கள் ....!!!
இழந்தான் உயிரை ....
விதைத்தான் பயிரை ...
முளைக்கும் உயிர் வேரூன்றி மரமாய் ..
தழைக்கும் பயிர் பயமின்றி தரமாய் ..
புது விடியல் தேடி ....
புது சுவாசம் தேடி .....
புது விலாசம் தேடி ...
அடைந்தான் சுதந்திரம் ....
வீரம்  கொண்டே இன்னுயிரை 
தியாகம் செய்தோர்க்கு திலகமென  காவியாய் ...!!
சத்தியம் என்றும் வெல்லும்
தூய்மை குணம் கொண்டதென வெண்மையாய் ...!!!
வளம் கொழிக்கும் பூமி
வற்றாதென  நிலம் செழிக்கும் 
பசுமையாய் ....
சுழலும் நாட்கள் தினம்
கழியும் மூவெட்டு நேரமென
சக்கரமாய் ....
வடிவமைத்தானோ தேசியக்கொடியை ....!!!

மலைத்திடும் இயற்கை

வான்  சிந்திய  மழைத்துளியில்
நனைந்த  பச்சைக்கொடிகள்
இச்சையோடு  பெற்றெடுத்தனவோ
தேன் சிந்தும்  மழலையை  !!

தேன் சிந்தும் மலரிதழில்
பசியாறி பல்லுயிர் பெருக்க
தான் தேடி வந்தனவோ
ருசியறிந்த வண்ண சிறகுகள் !!!

சிறகுகளில் சிக்கிய மகரந்தங்கள்
காற்றோடு கதை பேசி
சேறோடு விதையாகி வளர்ந்தனவோ
நிழல் தரும் விருட்ஷமென !!!

விருட்சத்தின் நிழலில் இளைப்பாற
விருந்தானது வீசிடும் காற்று ...
மருந்தும் தேவையோ மலைத்திடும்
இயற்கையோடு வாழ்ந்திடும் வாழ்வில் !!

நினைவுகள்




என்றாவது ஒரு நாள்
எங்காவது நீ பார்த்து
பூக்கும் புன்னகைக்கு விலை அதிகம்
அருகில் இருந்தும்
அரவணைக்காத உன் அன்பிற்கு ....
நீ கொடுத்து சென்ற நிமிடங்கள்
நீ சென்றதை விடவும்
வினாடிகளில் தொலைந்து போனது ...
மயிலிறகாய் எனை வருடும்
உன் நினைவுகளுக்கு
எப்படி சொல்லுவேன்  என்
உயிர் பறிக்கும் ஆயுதம் நீ என்று ???
விட்டுச் சென்ற உன்
நினைவுகளை இன்னமும்
சுமந்து கொண்டிருக்கிறேன் ...
ஜனிக்காத பிள்ளையை
தாய் சுமப்பது போல....
தீண்டி செல்லும் காற்று
மூச்சை திருடி சென்றால்
சுகம் காண்பேன் ....

நினைவுகள்



விழிக் கடிதம்

உன் இதயம் என்னோடு பேசும் 
உரையாடல்கள் நான் அறிவேன்...
மௌனமாய் உன் விழி போடும் 
கடிதங்கள் நான் படித்தேன் ...
இதழ்கள் பிரியாது 
இதயம் சேராது ...
போதும் உன் மௌனம் ...
விழிக் கடிதம் விடுத்து 
மொழி பேசிடு...

மீட்டெடுக்கிறேன்

காற்றுக்கு அசையாக் கொடியாய் என் நெஞ்சம்
அசைந்து கொடுத்தது உன்னிடத்தில் ....
பாறை இடுக்கில் முளைவிட்ட செடியாய்
என் இதயத்தில் நீ மலர்ந்தாய் சிறு பூவே !!!

விதைக்கப்படாமல் முளைத்து விட்டதால் என் நெஞ்சில்
வேரில்லாமல் நிலைத்து விட்டாய் ...
களங்கமில்லா உன் அன்பால் நிலவு
தேய்வது கூட எனக்குத் தோன்றவில்லை ...
என்றும் ஒளி வீசுகிறது பௌர்ணமியாய் .....!!!!

என் இதயவானில் ஒளி வீசும் நிலவு நீ !
என் கனவுத் தோட்டத்தில் கால் பதித்த முதல் பூ நீ !!

உன்னைப் பார்க்க கண்கள் ஏங்கவில்லை
பார்த்த பின்போ தூங்கவில்லை -
உறக்கம் கொடு கண்ணே என் விழிகளுக்கு !

பட்டுக் கரங்களைத் தொட்டுப் பேசியபோது
மனதில் எழாத எண்ணம்
எட்டு வைத்து நடந்த போது சொல்கிறது
என்றும் உன் கரம் கோர்த்து நடக்க .....

பழகிய நாட்களில் துடிக்காத உள்ளம்
விட்டு விலகிய போது துடிக்கிறது ...
உன் மீதான என் காதலை உணர்த்திட .....

என் இரவுத் தோட்டத்தில்
பல கனவுப் பூக்கள்
மலர்ந்து உதிர்ந்து போயின ....
என்றும் உதிரா மலராய்
என் கனவில் மலர்ந்து
என்னுள்ளே வாசம் செய்கிறாய் நீ !!

கனவில்
என்னோடு நீ வாழும்
ஒரு அத்தியாயம் புதிதாய்
உன்னோடு நான் தொடங்க ஆசைதான் ...!!!
எனினும் உன்னிடத்தில் சொல்லாது
என் இதயம் மட்டும் மானசீகமாய்
வாழும் உன்னோடு எப்போதும்....!!!

சில நேரங்களில் உன் மௌனம் கூட
எப்போதும் வேண்டும் என யாசிக்கிறேன்
என்னை வேண்டாம் என்று உன் இதழ்கள்
மறுத்திடுமோ என்ற அச்சத்தில் ....!!

பல நேரங்களில் உன் உரையாடல்களில்
நான் தொலைந்தே போகிறேன்
மீண்டும் என்னை மீட்டெடுக்கிறேன்....
மறுபடியும் தொலைந்திடவே !!!

விருப்பம்தான்
வாழ்நாள் முழுதும்
உன்னில் நானும் என்னில் நீயும்
தொலைந்து  விட ....!!!



வாழ்த்துக்கள்


தினம் பூக்கும் புது மலராய்
மனம் வீசும் நறுமலரே !!
அகமகிழ்ந்து முகம் மலர்ந்து
புன்னகை ஒளி வீசும் நிலவே ..!!!

புதிதாய் ஒரு அத்தியாயம்
புனைய போகும் இந்நாளில் ....

கவிதையில் வாழ்த்து கூற
நானும் கவி என நினைத்து
வார்த்தை தேடலில்...

புவி முழுதும் மாற
வானும் வந்ததோ  மண்ணிற்கு
கார்மேக சாயலில் ...

தேடிய வார்த்தையில் உனக்காய்
வரைந்த வாழ்த்தை
தவழ்ந்து வரும் மேகத்தின்
மழைத்துளியில் அனுப்பினேன் ...

பிரித்து படிக்கும் முன்னே
மறைத்து வைத்த புன்னகை
எட்டி பார்க்க வேண்டும் இதழிலே ...
என்றும் உன் வாழ்விலே .....



பெற்றோர்

வலிகள் அவனுள்ளே  இருந்த போதும்
விழிகள் பேசியதில்லை
வழித்துணையாய்  என்றும்
துணை வரும் - இவன் மொழி

புன்னகைக்க மட்டுமே கற்றுக் கொண்டவள்
என் முன்னே
கண்ணீர்துளிகளை காற்றுக்கு மட்டும்
தத்து கொடுத்தவள்- இவள்

தோற்றங்கள் மாறினும்
ஏற்றங்கள் காண்பினும்
வருடங்கள் ஓடியும்
வயது கூடியும்
வாழ்வில் என்றும்
இவனுக்கு துணையாய் இவள் !!
இவளுக்கு இணையாய் இவன் !!

பூமியில் நானும் பூக்க காரணம் - இவர்கள்
பெற்றெடுத்தவள் - இவள்
கற்று கொடுத்தவன்  - இவன்




மெய்யன்பு

நாடக மேடையென்றே எழுதிட்டான்
நடித்திட கதையொன்றை வகுத்திட்டான் ...

மனித முகமோ மாறுபடும் - இதில்
மனமோ முற்றிலும் வேறுபடும் !!

சிரித்திடும் அவன் முகம் - சிந்தித்திடு ..
தரித்திடும் அவன் வேஷம் கண்டு !!

காரியம் நடத்திட நடித்திடுவான் - அவன்
காலும் கையுமே பிடித்திடுவான் !!

பொழிந்திடும் அன்பிலே பொய்மையுண்டு - அவனின்
நெகிழ்ந்திடும் பேச்சிலே கயமையுண்டு !!

தெளிந்த நீரென தெரிந்திடுவான் - நீ
களித்து பருகிட்டால் கலங்கிடுவான் !!!

தேவதை அவளென நினைத்திடுவாய் -
தேள் போல் அவளும் கொட்டிடுவாள் ...!!

பூவென்று எடை குறைவாய் மதிப்பிட்டால்
புயலென்று தடை நீக்கி வதைத்திடுவாள்  !!

புறத்தே கண்டு புரிந்திடாதே ...
அகத்தை உணராது சரிந்திடாதே !!!!

எந்திர வாழ்வில் இதயம் துடித்திடுமா
பிறர்க்காய்??
மந்திரம் செய்தாலும் நிகழுமோ
அவ்வற்புதமே !!!

பொதுவாய் இது சிலர் குணம் ....
சாதுவாய் இருப்பது அலர் மனம் ..

மெய்யன்பை தேடியே அலையாதே ...
உன்னுள்ளே ஒளிந்திருக்கும்  தொலையாதே ..
உண்மையாய் வருந்திட்டால் களையேது ??
தன்மையாய் இருந்திட்டால் பிழையேது ???

 

தோழமை

முகம் பார்க்கும் முன்னே
முகவரி தெரியும் முன்னே
முதல்வரியில் பெயர் கண்டே
நண்பன் என தேர்ந்தேன் !!

கண்ட நாள் முதலாய்
காணும் நாள் வரையில்
காணாத பொழுதிலும்
துணையாய் என்றும் நீ
தோழன் என நின்றாய் !!!

சோகங்களில் மனம் தேடிய
குரல் உனது தான்
சமயங்களில் என்னை தேற்றும்
ஆறுதல் நீ தான்
நான் சுடர் எனினும்
தூண்டுகோல் நீ தான் .....!!!

நான் நானாக இருப்பதை
விரும்பியவன்...
என் எண்ணங்களை செயல்களில்
மெருகேற்றியவன்...
எனக்குள் இருக்கும் என்னை
அறியவைத்தவன்....

என் தொடக்கங்களில்
உன் தோழமை
துணை பலம் .....!!!

என் வார்த்தைகளில்
உன் பிரிவு
விலை அதிகம் ...!!!





புத்தாண்டெனும் மழலை

௧௧.௫௯ .௫௮ -௨௦௧௮ ⏳
௧௧.௫௯.௫௯- ௨௦௧௮⏳
௧௨.௦௦ .௦௦ - ௨௦௧௯🕛
கடிகாரம் நொடிமுல்லை நகர்த்தி செல்ல
..........................................................
விடிந்தது🌤  கொடிமுல்லையென நடுநிசி🌝 !!
விழித்தது 🌞இரவு களிப்போடு
மகிழ்ந்தது 😃மனதும்  பூரிப்போடு ....!!
திருவிழா கோலம் பூண்டது இரவு
கருவிலே காலம் ஈன்றது புது உறவு ...!!
கோப்பையில்🍷 மகிழ்ந்தது சில உள்ளம்
கோப்புகளில் 📂 விடிந்தது சிலர் இல்லம் ...!!
வானெங்கும்☁ வானவேடிக்கை🌋 ...
வீதியெங்கும் வண்ண கோலங்கள்🏵 ...
சீறிச்செல்லும் உந்துகள்🚌🚕...
பாடிச்செல்லும் சிந்துகள்🎹🎷🎸🎼 ...
பலருக்கு மற்றுமொரு நாளை ...
சிலருக்கோ புத்தம்புது காலை ..!!
புத்தாண்டு வாக்குறுதி 
புனையப்படா விதி !!

இறந்த காலங்கள் வரலாறாய்  !!
கடந்த பாதையின் காலடிச்சுவடுகளை  சுமந்திட
நிகழ்காலங்கள் நிகழ்வுகளாய் !!
நிஜங்களை நிழற்படம் எடுத்திட
எதிர்காலங்கள் அத்தியாயமாய் !!
வரலாற்றின்  அடிக்கல் நாட்டிட
மடிந்திடும் ஒவ்வோர் நொடிக்குள்ளும்
பூத்திடும் புது சந்தர்ப்பம்
சந்தர்ப்பம் சாத்தியமாகி
சரித்திரம் படைத்திட
மீண்டும் பிறந்திட்டது
புத்தாண்டெனும் மழலை !!

நிஜங்கள் மறைந்திடினும்
நிகழ்வுகள் மடியாது
அகழ்ந்தெடுத்திட நினைவுகளுண்டு ...!!!
எனவே
விதைத்திடுவோம் புன்னகையை
புதைத்திடுவோம் பகைமையை .....!!!

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...